சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை இன்று ஒத்திவைத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சுரேஷ் சலே இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு 02 கடிதங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அவரது தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, தினமும் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் அவரது மனைவியும் மகனும் அவரைப் பார்வையிட அனுமதித்து உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் தடுப்புக் காவலில் சிகிச்சை பெற்று வருவதால், இவ்வாறானதொரு உத்தரவைப் பிறப்பிக்க தமக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இவ்வாறு இரண்டு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சுரேஷ் சலேயின் சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும் பார்வையிடுவதற்கான அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கட்சிக்காரரின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், அவரது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தமக்கு தொழில்முறைப் பொறுப்பு இருப்பதாக சட்டத்தரணி அசித் சிறிவர்தன கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தனது கட்சிக்காரருடன் தொடர்ந்து
கலந்துரையாடுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி, தனது கட்சிக்காரரை தினமும் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என வலியுறுத்தி நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் பால்திய சந்திக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














