அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய கடல் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ உடனடியாக மீண்டும் திறந்துவிடப்படும் எனப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே ஒரு கொடூரமான போர் வெடித்திருந்தது.
இப்போரினால் வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், சர்வதேசக் கச்சா எண்ணெய் விநியோகத்தின் பிரதான பாதையான ஹோர்முஸ் நீரிணையும் முற்றாக முடக்கப்பட்டிருந்தது.
உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய இந்த இராணுவ மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டில் அவசரமாகக் கூட்டப்பட்ட ஜி7 மாநாட்டில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (17) ஈரான் உடனான அமைதி உடன்படிக்கையில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஈரான் அரசுத் தரப்பு முறைப்படி அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு வல்லரசு நாடுகளையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்து, இந்த அமைதி ஒப்பந்தம் சாத்தியமாவதற்குப் பின்னணியில் பாகிஸ்தான் நாடு மிக முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக வழிநடத்திய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா மோஜ்தபா கொமெய்னிக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
“இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமையானது, இருதரப்புக்கும் இடையே நிலவிய மிகக் கடுமையான மோதல்களுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதில் உள்ள சர்வதேச உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் விதிகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறக்கும்; அதேவேளையில், அமெரிக்கா ஈரானிய கடல் எல்லைகளில் விதித்திருந்த தனது கடற்படை முற்றுகையை உடனடியாக மீட்டுக் கொள்ளும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சர்வதேசக் கடல் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளமையானது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஸ்திரப்படுத்த வழிவகுத்துள்ளதுடன், வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வந்த மூன்றாம் உலகப் போர் பதற்றத்தையும் முழுமையாகத் தணித்துள்ளது.















