யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டம் நடாத்தியவர்களை சந்திக்காது அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு பணிகளை நேற்றையதினம் (19) நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் பார்வையிட நீதிமன்று அனுமதித்து இருந்து.
அந்நிலையில் புதைகுழியை பார்வையிட வரும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் , புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் புதைகுழி அமைந்துள்ள பகுதியை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்ட போதிலும் , அவர்களை புறக்கணித்து அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.
தம்மை புறக்கணித்து , தமது கோரிக்கைகளை நின்று கேட்க முடியாதவர்களாக தமக்கான நீதியினை பெற்று தருவார்கள் என நம்ப வேண்டுமா என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.













