அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக இன்று (03) தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவுக்கு (Grand Mosalla) கொண்டு வரப்பட்டதாக அந் நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் தொடக்கக் கட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கமேனிக்காக சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ நிகழ்வில், லட்சக்கணக்கான மக்களும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் அடங்கிய குழுவினரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டிருந்த கமேனியின் பூதவுடல் தாங்கிய பெட்டியை, இஸ்லாமியக் குடியரசின் மிக முக்கியமான சடங்கு நடைபெறும் இடங்களுள் ஒன்றான ‘கிராண்ட் மொசல்லா’விற்குள் துயருற்ற மக்கள் சுமந்து செல்வதை புகைப்படங்கள் காட்டின.
ரேசா ஷா பகலவியின் முடியாட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்லாமியப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நாட்டின் முதல் உச்சபட்சத் தலைவராகத் திகழ்ந்த அயதுல்லா ருஹுல்லா கொமேனிக்குப்பின், 1989 முதல் அயதுல்லா அலி கமேனி ஈரானை வழிநடத்தி வந்தார்.
அப்புரட்சியின் பின்னணியில் இருந்த கொள்கை ரீதியான சக்தியாக கொமேனி திகழ்ந்த அதே வேளையில், கமேனி அந்நாட்டின் இராணுவ மற்றும் துணை இராணுவக் கட்டமைப்புகளை வடிவமைத்தார்.
அவரது மறைவுக்குப் பிந்தைய இறுதிச் சடங்கு, அவரது வாரிசும் மகனுமான மொஜ்தபா கமேனியின் தலைமையின் கீழ் நடைபெறும் முதல் முக்கிய அரசு நிகழ்வாகவும் அமையும்.
நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வருகிறார்.
ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் ஏழு நாள் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஜூலை 3 அன்று தெஹ்ரானில் தொடங்கும் இந்நிகழ்வுகளில், உலகத் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள், மதப் பெரியோர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவார்கள்.
இறுதிச் சடங்குகள் மற்றும் அடக்கம் செய்யும் நிகழ்வுகளின் அடுத்தகட்டங்கள் நடைபெறவுள்ள தெஹ்ரான் மற்றும் புனித நகரங்களான கோம் (Qom) மற்றும் மஷ்ஹாத் (Mashhad) ஆகிய இடங்களில், இந்நிகழ்வுகளின்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களைச் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேவேளையில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக நகரின் மையப்பகுதியின் பெரும்பகுதிக்குத் தனியார் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
தெஹ்ரான் வான்வெளி இன்று முதல் பகுதியளவிலும், திங்கட்கிழமையன்று முழுமையாகவும் மூடப்பட்டிருக்கும்.
தெஹ்ரானில் நடைபெறும் சடங்குகளுக்குப் பிறகு, கமேனியின் உடல் ஈராக்கின் புனித நகரங்களான நஜஃப் மற்றும் கர்பலாவிற்கு எடுத்துச் செல்லப்படும்.
பின்னர், ஜூலை 9 அன்று, அவரது பிறந்த இடமான ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் உள்ள இமாம் ரெசா (Imam Reza) ஆலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.














