ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (05) தாக்குதலுக்குள்ளானதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அரபு நாட்டுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள அண்மைய கடல்சார் தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோடைடா நகருக்கு அப்பால் நடந்த தாக்குதல் குறித்து, ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையம் (UKMTO) தகவல் தெரிவித்துள்ளது.
ஹோடைடாவிற்குத் தென்மேற்கே 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில், அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய தாக்குதலாளிகளால் தாக்கப்படுவதாக அந்தக் கப்பல் தகவல் தெரிவித்ததாக UKMTO கூறியது.
ஒரு சிறிய படகு சரக்குக் கப்பலை நெருங்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியது; இதனால் பாதுகாப்புப் பணியாளர்கள் பதிலடி கொடுக்க நேரிட்டது.
பின்னர், தனது தானியங்கி அடையாள அமைப்பை அணைத்துவிட்டு, சுமார் 2 கடல் மைல் (3.7 கிலோமீட்டர்) தொலைவில் இருந்த ஒரு பெரிய கப்பலை நோக்கி அந்தப் படகு திரும்பிச் சென்றதாக UKMTO தெரிவித்துள்ளது.
சரக்குக் கப்பலும் அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்த பிரிட்டிஷ் இராணுவம், அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியது.
எனினும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.












