நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
இந்தக் கொடிய கலவரத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறையிலிருந்து பல கைதிகளை வேறு திருத்தச் சிறைச்சாலைகளுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மேலும் உரையாற்றிய அவர்,
இன்று காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது.
சண்டையைத் தடுக்க முயன்ற சிறை அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன், சிறையின் பிரதான நுழைவாயிலை நோக்கி விரட்டப்பட்டனர்.
சில கைதிகள் சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றனர்.
இதனால் அதிகாரிகள் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிறைச்சாலையின் ஆடவர் பிரிவில் உள்ள இரு எதிர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சிறை அதிகாரிகள் கைதிகளுக்குக் காலை உணவை வழங்கிக்கொண்டிருந்தபோது இந்த மோதல் தொடங்கியது.
இந்த வன்முறையில் பல சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறைக்குள் பதட்டம் நீடித்தாலும், அதிகாரிகள் பிரதான நுழைவாயிலின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்தியதோடு, நிலைமையை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை அவர், உறுதிப்படுத்தினார்; இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தற்போதைய விவரங்களை ஏ.சி. கஜநாயக்க வெளியிடவில்லை.
சிறைச்சாலையின் ஆடவர் பிரிவில் மட்டுமே இந்த வன்முறை நிகழ்ந்ததாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரு தரப்பு குழுக்களுக்கு இடையிலான மோதலே இதற்குக் காரணம் என்றும் அவர் விவரித்தார்.
இதற்கிடையில், சிறைக்காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறிய கஜநாயக்க, கைதிகளின் உறவினர்கள் அமைதி காக்குமாறும் கேட்டுக்கொண்டார்.












