பிரிட்டனில் படித்து முடித்துத் தகுதிபெற்ற புதிய மருத்துவத் துறைப் பட்டதாரிகளுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால், அது தேசிய சுகாதார சேவை அமைப்பிற்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவத் துறை வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான செவிலியர் , மகப்பேறு மருத்துவம் மற்றும் அவசர மருத்துவப் பணியாளர் படிப்புகளை முடித்த மாணவர்கள் இன்னும் தேசிய சுகாதார சேவை வேலைவாய்ப்புகள் இன்றித் தவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் வேல்ஸ் சுகாதாரக் கல்வி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, முதல்கட்ட வேலைவாய்ப்புப் பகிர்வு முடிவடைந்த பின்னரும், கிட்டத்தட்ட 400 செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பட்டதாரிகளுக்கு இன்னும் தேசிய சுகாதார சேவை அமைப்பில் வேலை கிடைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள வேல்ஸ் அரசாங்கம், தகுதிபெற்ற புதிய பட்டதாரிகளுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்காகப் பல்கலைக்கழகங்கள், சுகாதார வாரியங்கள் மற்றும் பட்டதாரிகளுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது.













