நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் நிகழ்ந்த தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் சிறைச்சாலை அமைப்பு மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்பு பலவீனங்களின் நேரடி விளைவே என்று இலங்கை சட்டத்தரிகள் சங்கம் (BASL) சுட்டிக்காட்டியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள சங்கம், கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
எந்தத் தரப்பிலிருந்து வன்முறை நிகழ்ந்தாலும், அதனைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சட்டத்தரிகள் சங்கம், தடுப்புக்காவல் மையங்களுக்குள் நிகழும் இத்தகைய வன்முறைகள் சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த நீதி நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கு நேரடி அச்சுறுத்தலாகவும் அமைகின்றன என்று எச்சரித்துள்ளது.
அத்துடன், சட்டப்பூர்வ மேற்பார்வை அமைப்புகள் தங்களின் நியாயமான பணிகளைச் செய்வதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்தச் சம்பவங்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஒரு சுயாதீனக் குழுவை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஒரு நேர்மறையான நடவடிக்கை என பாராட்டியுள்ள சங்கம், எனினும் இந்த விசாரணை வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும், விரைவாகவும் நடத்தப்பட்டால் மட்டுமே பொதுமக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் என்று நினைவூட்டியுள்ளது.
“ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் அல்லது கடமையில் இருந்து தவறிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை இந்த விசாரணை துல்லியமாகத் தீர்மானிக்க வேண்டும். குற்றவாளிகள் கைதிகளோ, சிறை அதிகாரிகளோ அல்லது வேறு எந்தத் தரப்பினராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என BASL வலியுறுத்தியுள்ளது.
சிறைகளில் நிலவும் நாள்பட்ட நெரிசலைக் கையாள்வதற்கு, சிறைகளின் கொள்ளளவை அதிகரிப்பதை விட மேலான ஆழமான நடவடிக்கைகள் தேவை எனச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம், பின்வரும் முக்கிய சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது:
* விசாரணைக் காவல் செயல்முறைகள் குறித்து ஒரு விரிவான மறுஆய்வை நடத்துதல்.
* குற்றவியல் வழக்குகளைத் தாமதமின்றி விரைவாக முடித்தல்.
* பொருத்தமான வழக்குகளில் பிணை வழங்குதல் மற்றும் சிறைத்தண்டனைக்குப் பதிலாக மாற்றுத் தண்டனைகளை அறிமுகப்படுத்துதல்.
* மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நவீன சிறை நிர்வாகத்தை உருவாக்குதல்.
“தனிநபர்கள் தங்களின் சுதந்திரத்தை இழந்தாலும், அவர்களின் அடிப்படை உரிமைகளோ அல்லது மனித கண்ணியமோ இழக்கப்படுவதில்லை.
எந்தவொரு கைதியும் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாகவே கருதப்பட வேண்டும்” என்று சங்கம் நினைவுபடுத்தியுள்ளது.
அதேவேளை, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றும் சிறை அதிகாரிகளுக்கு, பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் போதுமான வசதிகளைப் பெறுவதற்கான முழு உரிமை உண்டு என்பதையும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள இலங்கை சட்டத்தரிகள் சங்கம், நாட்டின் சிறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்புகளில் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்த இந்தத் துயரச் சம்பவத்தை ஒரு தூண்டுகோலாகப் பயன்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ செய்தி அறிக்கை, இலங்கை சட்டத்தரிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மற்றும் அதன் செயலாளர், சட்டத்தரணி நலின் டி சில்வா ஆகியோரின் கையொப்பங்களுடன் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.















