அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் எரிசக்திப் போக்குவரத்து தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதால், திங்களன்று மசகு எண்ணெய் விலைகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
GMT நேரம் 03:25 நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 3.10 டொலர் அல்லது 4.08% உயர்ந்து 79.11 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.95 டொலர் அல்லது 4.11% உயர்ந்து 74.36 டொலராகவும் இருந்தது.
ஈரானுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையன்று (12) அமெரிக்கப் படைகள் மற்றொரு சுற்றுத் தாக்குதல்களை நடத்தின.
இதில் துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்திப் பல இடங்களில் உள்ள டஜன் கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (Central Command) தெரிவித்தது.
அதேநரேம், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை திங்களன்று தெரிவித்தது.
அங்கீகரிக்கப்படாத பாதையில் சென்ற கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான் முன்னதாக அறிவித்திருந்த போதிலும், அந்த நீரிணை வணிகப் போக்குவரத்திற்குத் திறந்தே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்குவதற்கு முன்பு, உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஆறு கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணை வழியாகச் சென்றதாக ‘கேப்லர்’ (Kpler) நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.
இது கடந்த ஐந்து வாரங்களில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
மேலும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும், நீரிணையை மீண்டும் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டு கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து, அதிகரித்து வரும் தாக்குதல்கள் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.















