பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டின் 15 பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம், பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்த
மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 40, 44 மற்றும் 45 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரும் உடுநுவர, தவுலகல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை குறித்த சந்தேகநபர்கள், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தனியாகச் செல்லும் நபர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைத்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகள் அல்லது சி.ஐ.டி அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சோதனையிடுவது போல நடித்து, அந்த மக்களிடமும் அவர்களின் வீடுகளிலும் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறாக 2023ஆம் ஆண்டு முதல் இவர்கள் பேராதனை, கண்டி, கொழும்பு கொம்பனித்தெரு, கிராண்ட்பாஸ், மாவனெல்லை, நாரம்மல, பிலிமத்தலாவை, தவுலகல, கம்பளை, கலஹா, கேகாலை, கடுகன்னாவை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை நடத்தியுள்ளனர்.
வீடுகளைச் சோதனையிடுவது போல நடித்து, அந்த வீட்டில் உள்ளவர்களை ஒரே இடத்தில் இருக்கச் செய்து, வீடுகளில் இருந்த பணம் மற்றும் சொத்துக்களையும் இவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.
கம்பளை பகுதியில் இடம்பெற்ற இவ்வாறானதொரு கொள்ளைச் சம்பவத்தின் பின்னர் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், பேராதனை நகரில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏனைய இருவரும் பிலிமத்தலாவை நகரில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுக்கு பலத்த அடிமையாக இருந்த இம்மூவரும், கொள்ளையடித்த பணம் முழுவதையும் அதற்காகவே செலவிட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு பல்வேறு நகரங்களில் விற்கப்பட்டுள்ளதுடன், கண்டி நகரில் உள்ள ஒரு இடத்தில் அவ்வாறு விற்கப்பட்ட ஒரு தொகுதி தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களிடமிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, கத்தி, போதை மாத்திரைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













