தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கத்திற்குக் கீழ்நிலையில் ஏற்படக்கூடிய உயர் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தவும், நீர்த்தேக்கத்தைப் பாதுகாக்கவும் கொத்மலையில் உள்ள காமினி திசநாயக்க நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவுகள் படிப்படியாகத் திறக்கப்படும் என்று மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவுகள் மற்றும் மண் மதகுகள் இன்று (03) பிற்பகல் 3 மணிக்குள் திறக்கப்படும் என்றும், வினாடிக்கு சுமார் 250 கன அடி என்ற விகிதத்தில் கொத்மலை ஓயாவில் நீர் திறந்துவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, கொத்மலை அணைக்குக் கீழ் உள்ள கொத்மலை ஓயாவின் தாழ்வான பகுதிகளான நுகவெல, ரிவர்சைடு மற்றும் மாவத்துர பகுதிகளிலும், மகாவலி ஆற்றின் உலாவானே பகுதியிலிருந்து கம்பொல , வெலிகல்ல, கெலியோயா, பேராதெனிய, கட்டுகஸ்தோட்ட மற்றும் பொல்கொல்ல வரையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













