இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,000 எல்லை நெருங்கியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 89,395 ஆக உயர்ந்துள்ள அதேவேளையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தப் பாதிப்பில் மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 52.92 சதவீதமானோர் (47,310 நபர்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 19,007 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 17,725 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,341 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,973 நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 4,048 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.















