தனது தந்தை ஜோர்ஜ் இறந்த நான்கு நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று லியோனுக்கு எதிரான முக்கியமான லீக்ஸ் கிண்ண (Leagues Cup) மோதலில் இன்டர் மியாமி அணிக்காக உணர்ச்சிப்பூர்வமான மீள்வருகையை நிகழ்த்தி, லியோனல் மெஸ்ஸி கால்பந்துக்குத் திரும்பினார்.
தனது தந்தைக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தியபோது, தனது கால்பந்து விளையாட்டு வாழ்க்கையைத் தொடர்வது குறித்து உறுதியற்ற நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த மெஸ்ஸி, ஆட்டத்தின் இடைவேளையின்போது களமிறங்குவதற்கு முன்னதாக மாற்று வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகத் தனது சொந்த ஊரான ரோசாரியோவிற்குச் சென்று திரும்பிய சில நாட்களிலேயே அவரது இந்த வருகை அமைந்தது.

நீண்ட கால உடல்நலக்குறைவுப் போராட்டத்திற்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 8 அன்று ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்.
ஆர்ஜென்டினா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்தத் தொடர் முழுவதும் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தனது மகனின் தொழில்முறைப் பயணம் முழுவதும் அவரது முகவராகச் செயல்பட்டதன் மூலம், மெஸ்ஸியை எல்லாக் காலத்தின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக உயர்த்தியதில் ஜோர்ஜ் முக்கிய பங்காற்றினார்.

தனது தந்தையின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, கால்பந்து விளையாட்டிலிருந்து மெஸ்ஸி விலகியிருந்தார்.
இன்டர் மியாமி அணியும் தங்கள் அணித்தலைவருக்கு அதற்கான அவகாசத்தை வழங்கியிருந்தது.
அவர் நீண்ட காலம் ஓய்வில் இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில், புதன்கிழமையன்று (12) மியாமி அணிக்கு எதிர்பாராத விதமாகத் திரும்பிய அவர், ‘லீக்ஸ் கிண்ண’ போட்டியின் இரண்டாம் பாதி முழுவதும் களத்தில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.







