முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரச, இன்று (19) பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது.
இதில் பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்குதல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை உயர்த்துதல் ஆகியவை அடங்கும்.
அறிவிப்பின்படி, மாநில அரசுப் பணியில் உள்ள பெண்கள் இனி மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறத் தகுதி பெறுவார்கள்.
இதன் மூலம், முதல் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் விடுப்புக்கு இணையான சலுகை இதற்கும் அளிக்கப்படுகிறது.
அத்துடன், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கான மாதாந்திர வாகனப்படி 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அரசுத் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு வரம்பை 5 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், பால் கொள்முதல் விலை, மருத்துவக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் காப்பீட்டு வசதி உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாவிலிருந்து 41 ரூபாவாக உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த உயர்வால் அரசுக்கு மாதம் 30 கோடி ரூபாவும், ஆண்டுக்கு 360 கோடி ரூபாவும் கூடுதல் செலவு ஏற்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்காக ரூ.351 கோடியை அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்களை உருவாக்கும் வகையில் மொத்தம் 6,098 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இதில் பி.எஸ்சி. தாதியர் படிப்பிற்கான 660 இடங்கள், தாதியர் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் 1,925 கூடுதல் இடங்கள், 12 துணை மருத்துவப் (paramedical) படிப்புகளில் 2,778 இடங்கள் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், ஏழு புதிய அரசு தாதியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில், சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கை வசதிகள் கொண்ட, உலகத்தரம் வாய்ந்த பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.
மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதே இம்மையத்தின் நோக்கமாகும்.
மற்றொரு முக்கிய அறிவிப்பு ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ தொடர்பானது.
இந்த அறிவிப்பின்படி, மருத்துவச் சிகிச்சைக்கான ஆண்டு வரம்பை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
சென்னை, ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், கரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில், திருநங்கையர் மற்றும் திருநம்பிகளுக்கான மேலதிக மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும்.
பால் கொள்முதல் நடவடிக்கையானது 3.16 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்முதல் விலை உயர்வுடன் கூடுதலாக, ஒரு லிட்டருக்கான அரசு ஊக்கத்தொகையை 3 ரூபாலிருந்து 5 ரூபாவாக உயர்த்துவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த அறிவிப்புகள், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மருத்துவம் மற்றும் தாதியர் கல்வியை விரிவுபடுத்துதல், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், காப்பீட்டு நிதியுதவி பெறும் சிகிச்சைக்கான அணுகலை அதிகரித்தல் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
















