கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், இதுவரை மொத்தம் 261,375 சோதனைகள் நடத்தப்பட்டு 260,660 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1,025 பேர் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,427 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான 2,399 பேர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதச் சொத்துக் குவிப்பு தொடர்பில் 406 சந்தேகநபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் பொலிஸாரால் 2,263.547 கிலோகிராம் ஹெரோயின், 2,683.079 கிலோகிராம் ஐஸ், 9,483.301 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1 கோடியே 52 லட்சத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பாதுகாப்புப் படைகளினால் 293.862 கிலோகிராம் கொக்கைன், 1,657.530 கிலோகிராம் குஷ், 397.729 கிலோகிராம் ஹஷீஷ், 1,188.317 கிலோகிராம் மெத்தடோன், 450.117 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 44 லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, 2024 செப்டம்பர் 23 ஆம் திகதியிட்ட அறிக்கைகளின்படி, ஹெரோயின் தொடர்பான 166,114 சோதனைகளில் 165,974 பேரும், கஞ்சா தொடர்பான 148,964 சோதனைகளில் 147,696 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஐஸ் போதைப்பொருள் தொடர்பான 197,770 சோதனைகளில் 198,050 சந்தேகநபர்களும், கொக்கைன் தொடர்பான 307 சோதனைகளில் 307 பேரும், குஷ் மற்றும் ஹஷீஷ் தொடர்பான 7,470 சோதனைகளில் 7,376 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













