வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தாய்வானில் அண்மைய தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக, உள்நாட்டு தொற்று நோயியல் நிலைமை மற்றும் நமது குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மே 19ஆம் திகதி முதல் பின்வரும் எல்லை கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகிறது.
இதன்படி அவசர மற்றும் மனிதாபிமான வழக்குகளுக்கான விதிவிலக்குகளுடன் வெளிநாட்டினர் தாய்வானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தாய்வான் வழியாக பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்படும். இந்த தடைகள் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 2,017பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.