இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது ‘நகைச்சுவையானது’ என தெரிவித்தார்.
இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் வதந்திகள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், எந்தவொரு நாட்டிற்கும் விற்கப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் விலையை சீனா தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சினோபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என இன்றைய ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தடுப்பூசியின் விலை குறித்து இலங்கை அரசு முடிவு செய்யவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள சீன தூதரகம் அல்லது சீன அரசு மட்டுமே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் இந்த தடுப்பூசி ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட விலையைவிட குறைந்த விலையில் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.














