நாட்டின் தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் எனவும், புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டுவர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில் ”அரசியலமைப்பில் மாற்றமொன்று எமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு இணங்க நிச்சயமாக இடம்பெறும். ஆனால், அவசர அவசரமாக அரசியலமைப்பொன்றை உருவாக்க நாம் தற்போது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்கள்தான் ஆகின்றன. எமக்கு பொருளாதார சவாலை நிவர்த்தி செய்ய வேண்டிய பிரதான தேவை உள்ளது. முதலில் நாட்டின் பொருளாதாரத்தை சீரான நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும்.
சர்வதேச ரீதியாகவும் சில சவால்கள் காணப்படுகின்றன. எனினும், நேரத்தை இழுத்தடிக்காமல், உரிய காலத்தில் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இப்போதே அனைத்தையும் செய்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.