வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது சலுகை விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் சதோச வலையமைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விலைக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு உகந்த சந்தையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதாகவும், நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.