ஜார்ஜியாவில் பெண்களின் கருமுட்டைகளை எடுக்கும் அதிர்ச்சிகரமான மனித கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சீன குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் இந்த மோசடி, தாய்லாந்தைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான Pavena Foundation மூன்று தாய்லாந்து பெண்களை மீட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்ததாக பாங்காக் போஸ்ட் செய்தி கூறுகிறது.
பவேனா அறக்கட்டளையின் நிறுவனர் பவேனா ஹோங்சகுலா, இந்த மோசடியில் இருந்து தப்பித்து திரும்பிய ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து அறிந்ததாக விளக்கினார்.
அவர் கடத்தல்காரர்களுக்கு சுமார் ₹1.8 லட்சம் கொடுத்து தப்பித்ததாகவும், மற்ற தாய்லாந்து பெண்கள் விடுதலை பெற பணம் இல்லாததால் இன்னும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருவுறாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஜார்ஜிய தம்பதிகளுக்கு வாடகைத் தாய்மார்களாக பணிபுரிந்தால் ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் இந்த பெண்கள் ஆரம்பத்தில் கவரப்பட்டுள்ளனர்.
கடத்தல்காரர்கள் இவர்களின் பயணத்திற்கு தேவையான பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஜார்ஜியாவை அடைந்ததும், சுமார் 100 பாதிக்கப்பட்ட பெண்களுடன் நான்கு பெரிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தனது கொடூரமான அனுபவத்தை விவரித்துள்ளார். அங்கு பெண்களின் சினைப்பைகளைத் தூண்டுவதற்காக ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டு, மாதந்தோறும் முட்டை எடுக்கும் நடைமுறைக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
“பெண்களுக்கு சிகிச்சைக்காக ஊசி போடப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்படும், பின் இயந்திரம் மூலம் அவர்களின் முட்டைகள் எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.