யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும்,கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
அத்தோடு, கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் அவர் பார்வையிட்டிருந்தார்.
இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனவும், யாழ்ப்பாண மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, பாடசாலை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்ததுடன், கல்வியின் ஊடாக சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும், பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.