மியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்களும், இரண்டு இளம் பெண்களும் அடங்குவர்.
தற்சமயம் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து எல்லையில் இருந்து பேங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மேலும் நான்கு இலங்கையர்கள் மியான்மரில் தனித்தனி இணையவழி மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அண்மையில் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் மற்றும் மியான்மர் பிரதிப் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடிய போது, இந்த இணையவழி மோசடி நடவடிக்கைகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான உதவியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரினார்.
இந்த இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக, மொத்தம் 13 நபர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.