இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) திங்கட்கிழமை (17) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் நான்காகப் பதிவான இந்த நடுக்கம் டெல்லி நேரப்படி அதிகாலை 5:36 மணியளவில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம், 28.59 வடக்கு அட்சரேகையிலும், 77.16 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்ததாக NCS மேலும் கூறியது.
இந்த நிலநடுக்கத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,
டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம், பின்விளைவுகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் – என்று கூறினார்.
தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இப்பகுதிக்கு அருகில் ஒரு ஏரி இருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் இங்கு உணரப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த மாதம், நேபாளத்தில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி-என்சிஆர் மற்றும் பல வட இந்தியப் பகுதிகளில் உணரப்பட்டது.
எவ்வாறெனினும், எந்தவொரு சொத்துக்களுக்கும் அங்கு சேதம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.