நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார்.
குறித்த புகாரினையடுத்து பொலிஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகை விஜயலட்சுமி தனக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த பாலியல் புகாரை 2012-ல் திரும்பப் பெறுவதாக எழுதிக் கொடுத்தார் எனவும், அதன் அடிப்படையில் பொலிஸார் அந்த வழக்கை முடித்து வைத்தனர் எனவும், ஆனால், தற்போது அரசியல் காரணங்களுக்காக அந்த வழக்கை பொலிஸார் மீண்டும் விசாரித்து வருகின்றனர் எனவும், எனவே விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கை இரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. சீமான் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ‘சிலரது தூண்டுதல் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
எனினும் பொலிஸார் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி , நடிகை விஜயலட்சுமியும், சீமானும் 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர் எனவும், ஆனால் தாலி கட்டவில்லை எனவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதன் காரணமாகவே விஜயலட்சுமி, சீமானுடன் நெருங்கிப் பழகியுள்ளார் எனவும், பின்னர், அவர் அளித்த பாலியல் புகாரை சிலர் அளித்த நிர்பந்தம் காரணமாகவே திரும்பப் பெற்றார் எனவும், அவராகவே மனமுவந்து வாபஸ் பெறவில்லை எனவும். எனவே, சீமானுக்கு எதிரான இந்த பாலியல் வழக்கை இரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டனர்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘அப்படியென்றால் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு முதல் மனைவியா’ என கேள்வி எழுப்பியதோடு ‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை இரத்து செய்ய முடியாது.
இந்த வழக்கில் பொலிஸார் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார். இதன் அடிப்படையில் சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.