தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் திங்கட்கிழமை (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
அத்துடன், மீன்பிடி பணிகளுக்காக மீனவர்கள் பயன்படுத்தி 05 விசைப் படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மீனவர்கள் மேற்கண்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கமாறு வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதேநேரம், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் மீட்க தலையிடக் கோரி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் முடிவில்லாத தாக்குதல்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை காலை மீன்பிடிக்க புறப்பட்டன.
இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, வட மத்திய கடற்படை கட்டளை இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்து அவற்றை விரட்டுவதற்கு அதன் கரையோர ரோந்துக் கப்பல்களை அனுப்பியது.
தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது இழுவை படகுகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
2025 ஆம் ஆண்டு இதுவரை 18 இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.
மேலும், 131 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.