தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ கோப் (Robotic COP) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் கோப் (Red-Button Robotic COP) என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்படவுள்ளது. 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் வீதியின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் பொலிஸ் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கொள்ளவும், உடனடியாக பொலிஸ் துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தவும், அருகில் ரோந்து பணியில் ஈடுபடும் பொலிஸாரை எச்சரிக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆபத்தில் உள்ளவரை பொலிஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வீடியோ கோல் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குறித்த சாதனத்தை பொருத்தத் தமிழ அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.