தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதும் தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் தோற்கடிப்பதற்கு. “இளங்குமரன் என்ன கதைக்கிறார் என்பது மற்றவர்களுக்கும் விளங்குவதில்லை அவருக்கு விளங்குவதில்லை” என்று சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.அது உண்மை. அவருக்கு தமிழும் சரியாக வருவதில்லை தகவல்களும் சரியாகத் தெரிவதில்லை. கதைக்கின்ற பாணியும் ஒரு தினுசானது.அடிக்கடி ஊடகங்களில் அவர் மீம்ஸ் ஆக்கப்படுகிறார். அவருடைய ஆகப்பிந்திய மீம்ஸ் “யாழ்ப்பாணம் தெல்லிப்பளைக்குள் இருக்கிறது” என்பதாகும்.
மற்றவர் ரஜீவன். இவர் இளங்குமரன் அளவுக்கு வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை. அவர் முன்பு சுமந்திரனுக்கு நெருக்கமாக இருந்தவர். ஜனாதிபதித் தேர்தலையொட்டி அனுரவின் பக்கம் தாவினார்.சில கிழமைகளுக்கு முன் நீர்வேலியில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து “நீங்கள் தேசிய மக்கள் சக்திக்குத்தானே வாக்களிப்பீர்கள்? கைகளை உயர்த்திக் கூறுங்கள்” என்று அவர் கேட்டார். பெரும்பாலானவர்கள் கையை உயர்த்தவில்லை.அவர் கேட்டது கொமெடியாகியது.
மூன்றாவது உறுப்பினர் மருத்துவர்.அவர் ஒப்பீட்டளவில் நிதானம். ஆனால் கதைத்துப் பிரச்சினைக்குள் மாட்டுவதை விடவும் கதைக்காமல் இருப்பதே உத்தமம் என்று அவர் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. தையிட்டி விகாரை தொடர்பாக அப்பகுதியில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் தமது இயலாமையை வெளிப்படுத்தும் விதத்திலும், தாங்கள் சொல்லி அரசாங்கம் கேட்காது என்ற பொருள்படவும் தெரிவித்த கருத்துக்களுக்குப் பின் அதிகம் வாய் திறப்பதில்லை.அவ்வாறு கூறியதற்காக அவர் எச்சரிக்கப்பட்டரோ தெரியவில்லை.மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் வாயை இறுகப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவர்.
இவர்களைத்தவிர அமைச்சர் சந்திரசேகரனும் அடிக்கடி மீம்ஸ் ஆக்கப்படுகிறார்.அவருடைய உச்சரிப்பு,அவருடைய முகபாவம் எல்லாவற்றையும் வைத்து அவரை மீம்ஸ் ஆக்கி வருகிறார்கள். சாணக்கியன் அவரை மூக்கால் கதைப்பவர் என்று கூறினார். சுகாஷ் அவர் குறிக்கட்டுவான் துறைமுகத்தை ஜெற்றி என்று அழைப்பதற்கு பதிலாக ஜட்டி என்று அழைத்ததை வைத்து விமர்சித்தார்.ஜெற்றியை ஜட்டி என்று கூறியது தவறு.ஆனால் சந்திரசேகரன் தமிழை உச்சரிக்கும் விதத்தைக் கேலி செய்வது என்பது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழர்களின் உச்சரிப்புக்களைக் கேலி செய்வதாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய தரப்புகள் பொறுப்பாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.சந்திரசேகரனின் அரசியலை விமர்சிக்கலாம். என்.பி.பியின் அமைச்சர் என்ற அடிப்படையில் அவரை விமர்சிக்கலாம். ஆனால் அவருடைய உச்சரிப்பை விமர்சிக்கத் தேவையில்லை.
இவ்வாறாக தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்களே தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றிவிட்டார்கள். மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியானது தமிழ் மக்களின் பயங்களை நீக்கத் தவறியுள்ளது. தமிழ் மக்களின் பயங்களைப் போக்கும் விடயத்தில் என்பிபி பெரிய மாற்றம் எதையும் காட்டவில்லை
தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பான விடயம். தேசிய மக்கள் சக்தியை அல்லது ஜேவிபியை விமர்சிப்பதற்கு இது அதிகம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்தில் ஒன்றாக நிற்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்றுதான் பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும் எழுதி வருகிறார்கள்; பேசி வருகிறார்கள். ஏதாவது ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கட்சிகள் வேண்டுகோள் விடுகின்றன.
மணிவண்ணனின் அணியைச் சேர்ந்த ஒருவர் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால் தனது வாக்குகளை வீட்டுக்கு வழங்குமாறு கூறியிருக்கிறார்.நல்லூர் பிரதேச சபையில் ஐங்கரநேசன் தன்னுடைய வாக்காளர்களை வீட்டுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்.அர்ஜுனா தான் போட்டியிடாத இடங்களில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்.
ஆனால் இங்கே உள்ள பிரதான கேள்வி எது என்றால், தமிழ் மக்கள் ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கும் அர்ச்சுனாவுக்கும் வாக்களித்தார்கள்? என்பதுதான்.மிக எளிமையான பதில், தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட ஐக்கியமின்மைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தைப் பரிசோதித்தார்கள்.
அதேசமயம் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூறுவதுபோல தலைக் கணக்கை எண்ணினால் அது தேசிய மக்கள் சக்திக்கு வெற்றிதான். ஆனால் வாக்களிப்புக் கோலத்தைத் தொகுத்துப் பார்த்தால் அது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்குத் தோல்வியல்ல.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் 80,000 சொச்சம். வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்டு சுயேச்சைகளுக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அதாவது தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த வாக்குகளை விடவும் அதிக வாக்குகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து விலகி விட்டார்கள் என்பது பொருத்தமான ஒரு கருத்து அல்ல. தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திக்கிறார்கள் என்பது அந்த வாக்களிப்பில் தெரிகிறது. ஆனால் கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.
அப்பொழுது மட்டுமல்ல, இப்பொழுதும் அதுதான் நிலைமை. தமிழ் மக்கள் கட்சிகளாகப் பிரிந்துதான் நிற்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகள் நான்கு தரப்புகளாக நிற்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரே குரலில் பிரச்சாரம் செய்யும் இந்தக் கட்சிகள்,தங்களுக்கு இடையே மோதிக் கொள்கின்றன. ஒருவர் மற்றவரைத் துரோகியாக்குவது; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துவது;கூட்டத்தில் கைதட்டுகளை பெறுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவது…. இப்படித்தான் இருக்கிறது தேர்தல் போட்டிக் களம். இதே நிலைமைதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் காணப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்விகளில் இருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக் கொள்ளவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓரளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறது. அது ஒரு கூட்டை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டு ஏனைய மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் அர்ச்சுனாக்களுக்கும் எதிராக, தனிப்பெரும் சக்தியாக எழுச்சி பெறுமா? என்று பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
முன்னணிக்கு முன்பை விட ஆதரவு கூடியிருக்கிறது. ஆனால் அது தமிழரசுக் கட்சியின் இடத்தைப் பிடிப்பதற்கு இன்னும் வளர வேண்டும். தமிழரசுக் கட்சி ஏனைய எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளை விடவும் வடக்கு கிழக்கு தழுவிய கிராமமட்ட அடிமட்ட வலைப் பின்னலைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி. அதுதான் அவர்களுடைய பலம். குறிப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர்களுக்கு மிகவும் அனுகூலமான அம்சம் அது.
சுமந்திரன் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின் கட்சியின் கீழ்மட்ட வலையமைப்பை எப்படிக் கட்டியெழுப்புவது என்ற விடயத்தில் திட்டமிட்டு உழைக்கின்றார்.அவர் உள்ளூராட்சி சபையில் தமிழரசுக் கட்சியை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார் என்றுதான் ஒரு தோற்றம் கிடைக்கிறது.ஆனால் அந்த உழைப்புக்குப் பின்னால் வேறு ஒரு மறைமுக இலக்குகளும் உண்டு.அடுத்த கட்சித் தலைமைக்கான தேர்தலின்போது பொதுச்சபையில் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பாதுகாப்பது முதலாவது இலக்கு.உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கிராம மட்டங்களில் இறங்கி வேலை செய்யும் பொழுது கட்சியின் கீழ்மட்ட வலையமைப்பு பெருமளவுக்கு சுமந்திரனுக்கு விசுவாசமானதாக மாற்றப்படுகிறது. அது சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய கட்சித் தலைமைக்கான தேர்தல்களில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தலாம். இது முதலாவது இலக்கு.
இரண்டாவது இலக்கு, அவ்வாறு வெற்றி பெறுவதன் மூலம் சிறீதரணை ஓரங்கட்டலாம். சிறீதரனை கிளிநொச்சிக்குள்ளேயே சுருக்கி விடலாம். ஒரு கட்டத்தில் முடியுமானால் அவரைக் கட்சியில் இருந்தும் நீக்கலாம். எனவே உள்ளூராட்சி சபைகளுக்காக சுமந்திரன் உழைப்பது என்பது தனிய கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமல்ல.சிறீதரனை தோற்கடிக்க வேண்டும், அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடும்தான்.
இப்படிப்பட்ட உள்நோக்கங்களோடு மக்களைத் திரட்டும் அரசியல்வாதிகள் தேசத்தைத் திரட்ட உதவ மாட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள்தான் தேசத்தை உடைத்தன. இப்பொழுதும் அதே நிலைமைதான். இது தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமானது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களும் அமைச்சரும் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் தங்களுடைய மதிப்பை உயர்த்துவதற்குத் தவறியிருக்கிறார்கள்.இது தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றி வாய்ப்புகளை பாதிக்கக்கூடியது. இந்த மாற்றம் தமிழ் தேசியக் கட்சிகளின் உழைப்பினால் கிடைத்த ஒன்று அல்ல. மாறாக தேசிய மக்கள் சக்தியின் இயலாமையின் விளைவு.
எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இருந்த “புதியது; மாற்றத்தைக் காட்டுவது” என்ற கவர்ச்சி இப்பொழுது குறைந்துவிட்டது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களே அந்தக் கவர்ச்சியை குறைத்து விட்டார்கள். இது முதலாவது விடயம்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த பின்னடைவு ஐக்கியமின்மையால் கிடைத்தது. அது அப்படியே இப்பொழுதும் உண்டு. முன்னணி ஒரு மாற்றத்தைக் காட்டியிருக்கிறது அவ்வளவுதான்.இது இரண்டாவது விடயம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு வாக்களிப்புக் கோலத்தில் பிரம்மாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை.இது மூன்றாவது விடயம்.
சங்குக் கூட்டணி தெட்டம் தெட்டமாக வெற்றிகளைப் பெறக்கூடும். சந்திரகுமாரை இணைத்துக் கொண்டதால் கிளிநொச்சியில் அவர்களுக்கு ஒரு புதிய வாக்கு பரப்பு கிடைத்திருக்கிறது. இது நாலாவது.
இந்த நான்கு தோற்றப்பாடுகளையும் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் ஒரு பகுதி தேசிய மக்கள் சக்திக்குப் பாதகமானது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு தமிழ் தேசியத் தரப்புக்குச் சாதகமானது. ஆனால் முழுமையான தமிழ்த் தேசிய ஐக்கியம் இன்னமும் ஏற்படவில்லை. அந்த ஐக்கியத்துக்குள் தமிழரசுக் கட்சி வந்தால் தான் அது பிரமாண்டமானதாக மாறும்.
எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வென்றெடுக்கும் கூட்டு அரங்கில் இல்லை. அதே சமயம் என்பிபி அதன் கவர்ச்சியை இழந்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் என்பிபிக்கு வாக்களித்த காரணம் ஒப்பீட்டளவில் அப்படியே இருக்கிறது. ஆனால் அந்த வெற்றிக்கு என்பிபி தகுதி உடையது அல்ல என்பதனை வடக்கு கிழக்கில் உள்ள அதன் பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் விட்ட அதே தவறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் விடக்கூடாது என்று தமிழ்மக்கள் சிந்திப்பார்களாக இருந்தால் தாங்கள் ஒரு தேசம், ஒரு தேசிய இனம் என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டுவார்களா?