இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய தலைநகர் புது டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்தப் பகுதிகளில் அதிகளாவன பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-நஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகிய நிலையில் ஜம்மு-காஷ்மீரின் மேற்கு எல்லையில் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் ததாக்குதல்களை பாக்கிஸ்தான் நடத்தியதுடன் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.