மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்து மோதியதில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை தாயும் இரு பிள்ளைகளுமாக மகோயாவுக்கு சென்று பிற்பகல் 1 மணியளவில் அங்கிருந்து மீண்டும் பேருந்தில் உறுகாமம் வந்து இறங்கும் போது முதலில் 7 வயதுடைய மகனை இறக்கி வீதியோரம் நிறுத்திவிட்டு , மற்றைய பெண் 11 வயதுடைய பிள்ளையை இறக்குவதற்காக தாய் பேருந்தினுள் ஏறியபோது, வீதியோரமாக நின்ற மகன் பேருந்துக்கு முன்பாக சென்று வீதியை கடந்து செல்ல ஓடுகையில், பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்நிலையில், கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற நிலையில, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்காக பயணித்துக்ககொண்டிருந்த போது ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுவன் 7 வயதுடைய புவனேஸ்வரன் கபிசேக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை மேற்கொண்டதோடு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்பு விடுத்துள்ளார்.















