எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 88 விசைப்படகுளில் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அதில் நால்வர் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கைதுசெய்துள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய விசைப் படகினையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 4 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் அங்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்ட விசாரணையின் பின்னர் குறித்த மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 விசைபடகுகளும், அதிலிருந்த 185 மீனவர்களும் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














