சிறைச்சாலைப் பேருந்தை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவைக் கொல்வதற்கு கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சாலிந்த உள்ளிட்ட பாதாள உலகக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன்ட் கர்னலின் விசாரணையின் போது இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
கொமாண்டோ சாலிந்தவுக்கு ஆயுதங்களை விற்றதாகக் கூறப்படும் லெப்டினன்ட் கர்னல், பேலியகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கர்னலின் விசாரணையின் போது, கொமாண்டோ சாலிந்த பல சந்தர்ப்பங்களில் தன்னை தொலைபேசியில் அழைத்து இரண்டு கிளேமோர் குண்டுகளைக் கேட்டு துன்புறுத்தியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கர்னல், கொமாண்டோ சாலிந்தவிடம் இரண்டு கிளேமோர் குண்டுகளைக் கொடுத்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஊடகவியலாளராக மாறுவேடமிட்டு ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் தோல்வியடைந்தால், அடுத்த தாக்குதல் திட்டமாக இந்த கிளேமோர் குண்டுத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டாவை ஏற்றிச் சென்ற சிறைச்சாலைப் பேருந்து புதுக்கடை நீதிமன்றத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வீதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் கிளேமோர் குண்டை மறைத்து ரிமோட் கொண்ட்ரோலைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்வதே பாதாள உலகக் கும்பலின் திட்டமாக இருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இந்த பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதால் பாரிய குற்றச் செயல் ஒன்று தவிர்க்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளராக மாறுவேடமிட்டு, கேமராவில் துப்பாக்கியை பொருத்தி, அதை செயல்படுத்துவதன் மூலம் ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் முன்னதாகவே தெரியவந்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டவுடன், ஹரக் கட்டாவைக் கொலை செய்யும் திட்டம் தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.














