பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையதினம் (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஆடைகளை அணிந்து வருவதற்கு சபாநாயகர் இன்று (21) அனுமதி வழங்கினார்.
அதன்படி, நாளை நாடாளுமன்றுக்கு வரும்போது தொடர்புடைய அறிவிப்புக்கு ஏற்ப செயல்படுமாறு சபாநாயகர் இன்று அறிவித்தார்.
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அடையாளப்படுத்தும் வகையில், நாளை (22) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டிய சின்னத்தை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது வழங்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.














