ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என்பதை தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தைகள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (GMT 06:00) மஸ்கட்டில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று புதன்கிழமை (04) இரவு அரக்சி அறிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் காலம் மற்றும் இடம் குறித்த கருத்து வேறுபாடுகளால் கேள்விக் குறியாகியுள்ளதாக முன்னதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து உறுதிபடுத்திய அப்பாஸ் அரக்சி,
பேச்சுவார்த்தைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததற்காக எங்கள் ஓமானி சகோதரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார்.
இதேவேளை, முதலில் திட்டமிட்டபடி துருக்கிக்குப் பதிலாக ஓமானில் ஈரானுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா பங்கேற்கும் என்பதை வொஷிங்டன் உறுதிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கட்டார், துருக்கி மற்றும் எகிப்தைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய கொள்கைகளின் கட்டமைப்பை வழங்கியுள்ளனர்.
இதில் யுரேனியம் செறிவூட்டலை கணிசமாகக் கட்டுப்படுத்த ஈரான் உறுதியளித்துள்ளது என்று பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் உள்ள முக்கிய அம்சங்களில் பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்தியத்தில் ஈரானின் நட்பு நாடுகளின் ஆயுதங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் போராட்டக்காரர்கள் மீது ஈரான் நடத்திய வன்முறை அடக்குமுறையைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரபிக் கடலில் படைகளை குவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தெஹ்ரான் மீது வொஷிங்டன் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன.
1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல.
ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர்.
ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது.
பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.












