பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.
சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன.
இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமான் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்பார்கள்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவாத்தையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன.
எனினும், பின்னர் பேச்சுவார்த்தைகளை ஓமானுக்கு நகர்த்தவும், அணுசக்தி பிரச்சினைகளுக்கு நிகழ்ச்சி நிரலை சுருக்கவும் ஈரான் வலியுறுத்தியது.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் இறையாட்சி இப்போது அதன் பலவீனமான கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ போன்ற அதிகாரிகள் நம்புகின்றனர்.
கடந்த மாதம் நாடு தழுவிய போராட்டங்கள் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தன.
கமேனியின் படைகள் இரத்தக்களரியான ஒடுக்குமுறையுடன் பதிலளித்தன.
இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டை குறிவைத்து புதிய இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைத்தார்.
1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல.
ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர்.
ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது.
பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.















