செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளின் வேகமான வளர்ச்சியால், பிரித்தானியாவில் தரவு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த மையங்கள் இயங்குவதற்கு பாரிய அளவிலான மின்சாரமும், குளிரூட்டுவதற்கு அதிகப்படியான நீரும் தேவைப்படுகின்றன.
குறிப்பாக, அமெரிக்க நிறுவனங்களின் நிதியுதவியுடன் பல புதிய மையங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இவை நாட்டின் கார்பன் வெளியேற்றத்தைக் கணிசமாக உயர்த்தக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (Ed Miliband ) எட் மிலிபான்ட் எழுதியுள்ள கடிதத்தில், “எதிர்காலத்தில் தரவு மையங்களின் மின்சாரத் தேவை மற்றும் அது எரிசக்தி அமைப்பில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை இயல்பாகவே நிச்சயமற்றவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அரசாங்கத்தின் திட்டமிடல் மாதிரிகள் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தரவு மையங்களின் தாக்கத்தை மதிப்பிட்டு வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, தரவு மையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆராய நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல் தணிக்கைக் குழு (Environmental Audit Committee) புதிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
2050-ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை நிகர பூச்சிய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சட்டரீதியான கடப்பாடு பிரித்தானியாவிற்கு உள்ளது.
அதேவேளை, ‘நிகர பூச்சிய’ இலக்குகளைக் காரணம் காட்டி தரவு மையங்களைத் தடை செய்வது நாட்டை ஏழ்மையாக்கக்கூடும் என கன்சர்வேடிவ் கட்சியின் எரிசக்தி செயலாளர் எச்சரித்துள்ளார்.
மேலும் AI மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் ஒரு பகுத்தறிவுமிக்க அணுகுமுறை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.













