அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், நேற்று நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் இரகசியமாக விசாரணை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 06 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையில், ஹிலாரி கிளிண்டன் தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
‘நான் அவரைச் சந்தித்ததே இல்லை; அவருடைய தீவுக்கோ, அலுவலகங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்றதில்லை’ என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த விசாரணை வெறும் ‘அரசியல் நாடகம்’ எனவும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான நெருங்கிய தொடர்புகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே குடியரசுக் கட்சியினர் தன்னை விசாரணை செய்வதாக ஹிலாரி குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணையின் போது, குடியரசுக் கட்சி எம்.பி. லாரன் போபர்ட் விதிமுறைகளை மீறி ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் கசியவிட்டதால் விசாரணை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
ஹிலாரியைத் தொடர்ந்து, அவரது கணவரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனிடம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற குழுவினால் கட்டாயப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருந்தபோது 2019-ல் தற்கொ*லை செய்து கொண்டார்.
தற்போது 2026 இல் அமெரிக்க அரசு எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்த முக்கியப் புள்ளிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது












