சுகாதார அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவர், 2 கோடி ரூபாவுக்கும் அதிக தொகையை இலஞ்சமாகப் பெற்றபோது, அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் நிறுவனமொன்றின் கட்டடம் சுகாதார அமைச்சின் தேவைக்காக வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. குறித்த கட்டடத்திற்கான வாடகைக் கொடுப்பனவுகளை எவ்வித தாமதமுமின்றி காசோலைகளாக வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காகவே, சந்தேகநபர் இந்த பெருந்தொகையை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, 50 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் அல்லது உடமைகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்கு பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதாகவும் கூறி வர்த்தகர் இலஞ்சத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த வர்த்தகரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












