மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
மட்;டக்களப்பு மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டு முதல்வரின் தலைமையுரையுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.
இதன்போது சபையின் குழுக்களினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
மாநகரசபை அமர்வில் இன்றைய அரசாங்கத்தினால் பல வீதிகளை காபட் வீதியாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை வீதியை வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரசபை ஊடாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது பிரஜா சக்தி என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் அரசியல் இலாபம் தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.இதன்போது குறுக்கிட்டு தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் வறுமையினை ஒழிக்கும் வகையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் ஒருங்கிணைத்தே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு பிரஜா சக்தி திட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காகவே இந்த அமைப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் நலன்சார்ந்த அமைப்பு என்றால் அனைவரும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த திட்டம் மக்களின் வறுமையினை ஒழிக்கும் வகையிலேயே அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த நோக்கமும் இல்லையெனவும் இதற்கு அனைவரது செயற்பாடுகளும் உள்வாங்கப்படும் எனம் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்டன.
இன்றை அமர்வில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள அரசைபாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.மாநகரசபையின் உறுப்பினர் ஜெயக்குமாரினால் இது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டிய அவசியம் தொடர்பில் உரையாற்றப்பட்ட நிலையில் இது தொடர்பிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
ஜனநாயகத்தினையும் கருத்து சுதந்திரத்தினைம் பாதிக்கும் வகையிலான சட்டங்களை கொண்டுவருவதை அனுமதிக்கமுடியாது என உறுப்பினர்கள் இதன்போது உரையாற்றிய நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இவ்வாறான விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டுவரமுடியும் என தெரிவித்த நிலையில் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

















