லண்டனில் உள்ள யூத சமூகத்தினரை ஈரானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானிய ஆண்கள் மீது பிரித்தானியத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரானிய உளவுத்துறைக்காக லண்டனில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய நபர்களைக் கண்காணித்து, உளவு பார்த்ததாக (Reconnaissance) கூறப்படும் புகாரின் பேரில் இந்த மாத தொடக்கத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அவர்களில் இருவர் மீது தற்போது உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எஞ்சிய இருவர் எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு பிஞ்ச்லி (North Finchley) பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய-ஈரானிய இரட்டை குடியுரிமை கொண்ட (Nematollah Shahzavani) நெமத்துல்லா ஷாசவானி மற்றும் எட்ஜ்வேர் (Edgware) பகுதியைச் சேர்ந்த ஈரானிய பிரஜையான அலிரேசா ஃபராசாதி (Alireza Farazadi) ஆகியோரே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 2025 ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 15 வரையான காலப்பகுதியில் ஈரானிய உளவுத்துறைக்கு உதவும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை எனத் தெரிவித்துள்ள பிரதி உதவி ஆணையர் விக்கி எவன்ஸ், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எவரையும் சட்டம் தப்பவிடாது என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இன்று (மார்ச் 19) வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.












