பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “France Munitions” என்ற புதிய தளத்தை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தளம் பிரெஞ்சு இராணுவம், கூட்டணி நாடுகள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கான ஆயுத விநியோக மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சபையில் உரையாற்றிய பிரதமர் Sébastien Lecornu, “நாம் சுயாதீனமாக இருக்க வேண்டுமெனில் நாமே நம்மை பாதுகாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். உலகளாவிய போர் சூழ்நிலைகளில் ட்ரோன்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக ஆயுத கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக கூடுதலாக 8.5 பில்லியன் யூரோ முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்ற 16 பில்லியன் யூரோவுடன் இணைக்கப்படும். மேலும், சிவில் மற்றும் இராணுவ துறைகளுக்கான “இரட்டை பயன்பாட்டு” தொழில்துறைக்கு 300 மில்லியன் யூரோ ஆதரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவ திட்டமிடல் சட்டத்தின் திருத்தம் விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய “தேசிய பாதுகாப்பு எச்சரிக்கை நிலை” அறிமுகப்படுத்தப்பட்டு, அச்சுறுத்தல் காலங்களில் விரைவான முடிவுகள் எடுக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இந்த மாற்றம் உதவும் என அரசாங்கம் விளக்கியுள்ளது.















