ரெப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலன் (Balen) எனப் பிரபலமாக அறியப்படும் பலேந்திர ஷா (Balendra Shah), நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்றார்.
நேபாள ஜனாதிபதி ராமச்சந்திர பௌடல் அவருக்குப் பதவி மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணத்தை செய்து வைத்தார்.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி ராம் சஹாய பிரசாத் யாதவ், தலைமை நீதிபதி பிரகாஷ் மான் சிங் ராவத், தேசிய சட்டமன்றத் தலைவர் நாராயண் பிரசாத் தஹால், முன்னாள் பிரதமர்கள், மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் தூதரக சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
35 வயதான இவர், வியாழக்கிழமை அன்று ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் (RSP) நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், ஷாவின் தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சபையில் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை உறுதி செய்தது.
தலைமுறை மாற்றத்தையும் ஊழலற்ற ஆட்சியையும் கோரி கடந்த ஆண்டு நடந்த வன்முறைமிக்க ஜென் Z (Gen Z) போராட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், அது பாரம்பரியக் கட்சிகளைப் படுதோல்வி அடையச் செய்தது.
பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர்களில், 165 பேர் நேரடி வாக்களிப்பு மூலமாகவும், 110 பேர் விகிதாசார வாக்களிப்பு மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.













