முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தரும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்நாட்டு ரசிகர்களுடன் தனக்கு ஒரு வலுவான பிணைப்பு இருப்பதாக உணர்வதாகவும், விரைவில் அங்கு நேரத்தைச் செலவிட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர், பல ஆண்டுகளாக ஆதரவளித்து வரும் இந்திய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, போட்டிகளிலும் உலகெங்கிலும் அவர்களின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.
மாட்ரிட்டில் நடைபெற்ற லாரியஸ் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக டைம்ஸ் நவ்வுக்கு அளித்த செவ்வியிலேயே செர்பிய வீரர் இதனைக் கூறினார்.
இந்தியப் பயணத்திற்கான காலக்கெடு நிச்சயமற்றதாக இருந்தாலும், பயணம் செய்யும் நோக்கம் உறுதியாக உள்ளது என்றும், பயணத் திட்டம் பெரும்பாலும் தனது விளையாட்டுப் பொறுப்புகளைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த செவ்வியின் போது, விராட் கோலியுடனான தனது உறவைப் பற்றியும் பேசிய ஜோகோவிச், தன்னை கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் முக்கியப் பங்காற்றியதாகவும் வெளிப்படுத்தினார்.
இருவரும் தொடர்பில் இருப்பதாகவும், தனது இந்தியப் பயணம் உறுதியானால், இருவரும் ஒரு மகிழ்ச்சியான விளையாட்டுத் தருணத்தைப் பகிர்ந்துகொள்ளக்கூடும் என்றும் அவர் கூறினார்.















