மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள சேமக்காலையில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை மனோருபன் அவர்களினால் விசேட பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டதுடன் புனித நீரும் தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளினால் தமது உறவுகளில் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவு தின நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இருதயபுரம் பகுதியினை சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட பத்துக்கும் அதிகமானோர் குறித்த ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்திருந்த நிலையில் இந்த சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தமது உறவுகள் படுகொலைசெய்யப்பட்டமைக்கான நீதியை இந்த அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கையினை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்,
அரசியல் ரீதியாக திட்டமிட்ட அடிப்படையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டு நான்காம் மாதம் 21ஆம் திகதி நிகழ்த்தப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வு நடைபெற்று இப்போது 7 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.
இன்னமும் முழுமையான குற்றவாளிகள் யார் என்பது அடையாளப்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் இந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் கூட நடைபெற்றிருந்தன.
இந்த ஆட்சி காலத்தில் ஒரு வெளிச்சம் தெரிவது போன்று தெரிகின்றது.
அதாவது இரண்டாம் மட்ட குற்றவாளிகள், மூன்றாம் மட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது ஒரு தேவைக்காக, ஒரு ஆட்சி மாற்றத்திற்காக நடாத்தப்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலாக இது கொள்ளப்படுகின்றது.
பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள், அருட்தந்தை சிறில் காமிணி அவர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு நீதி வேண்டும், இறந்த ஆத்மாக்களுக்கு உண்மையான நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அண்மையில் கிடைத்த தகவல்களின் படி, இந்த விடயம் ஒரு திட்டமிட்ட அடிப்படையில் செய்யப்பட்டது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான ஒரு சம்பவம் என்றும் கூறப்படுகின்றது.
அதற்கு முன்பாக இந்த சம்பவத்தை வேறு விதத்தில் திசை திருப்பியிருந்தார்கள்.
குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது.
இப்போது ஓரளவுக்கு சில நம்பிக்கைகள் பிறந்திருக்கின்றது.
அதாவது இதில் பிரதான திட்டமிட்டு செயற்பட்ட ஒரு உளவுதாரி அல்லது உளவு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது.
அதன் மூலமாக பல்வேறுபட்ட சம்பவங்கள் வெளியில் கொணரப்பட்டிருக்கின்றது.
எது நடந்தாலும் மறைந்தவர்களை அல்லது கொல்லப்பட்டவர்களை மீட்டெடுக்க முடியாது இருக்கின்றது.
இருந்தாலும் அந்த குடும்பங்கள் இதுவரைக்கும் கண்ணீரில் தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் இன்றும் இந்த அடக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் அவர்கள் கண்ணீர் சிந்தி இறை பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் இறைவனை கூட்டாகக் கோருகின்றார்கள்.
எனது நண்பர் பரமேஸ்வரன் அவரது மகனும் கூட இந்த இடத்தில்தான் புதைக்கப்பட்டிருக்கின்றார்.
அதேபோன்று என்னுடைய மாணவர்களாக இருந்தவர்களும் கூட கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே மொத்தத்தில் எங்களுடைய உறவுகள் இந்த அநியாயமாக பலியெடுக்கப்பட்டிருக்கின்றார்கள் அரசியல் தேவைக்காக.
ஆகவே இந்த அரசாங்கத்திடம் மிகவும் உருக்கமாக நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், கடந்த காலத்தில் இந்த குற்றவாளிகளை மறைப்பதற்காகவும், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்காகவும் பாரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இந்த குற்றத்தை கண்டுபிடிக்க முடியாமலும், இறந்தவர்களுக்கு, கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க முடியாத நிலையிலும் மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு நடைபெற்றது.
இப்போதைய நிலையில் கொஞ்சம் எங்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கின்றது.
இந்த குற்றச் செயலை செய்வதற்காக ஒரு அரசுத் துறையில் இருந்து கூட ஒரு பெரிய குற்றவாளி செயற்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.
அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.
அவரை முழுமையாக விசாரணை செய்து எத்தனை திசைதிருப்பல்கள் ஏற்பட்டாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, இந்த கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
தயவு செய்து நான் கேட்கின்ற விடயம் என்னவென்றால், இது உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
நாங்கள் குற்றம் செய்யாதவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, உண்மையான குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் உண்மையில் வவுணதீவில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால், ஒரு அப்பாவி அஜந்தன் என்று சொல்லப்படுகின்ற அப்பாவி, அதில் சம்பந்தப்படாதவர்.
அவருடைய ஜக்கெட்டை எடுத்துக்கொண்டு அந்த வவுணதீவு பாலத்தில் போட்டு அதை மோப்பம் பிடிக்கின்ற நாய் மூலமாக அந்த ஜக்கெட்டை கண்டுபிடித்து, கரையக்கன்தீவில் அந்த அஜந்தன் என்று சொல்லுபவர் இருப்பதாக சொல்லப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு வீணாகத் தண்டிக்கப்பட்டார்.
இப்போது இந்த நாட்டில் இருக்க முடியாத நிலையில் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார், உண்மையில் அவர் குற்றவாளி அல்ல.
அப்ப குற்றவாளிகளை தாங்கள் அறிந்து கொண்டும், குற்றவாளிகளை கண்டுபிடிக்காத விதத்தில் அப்பாவிகள் மீது குற்றங்களை சுமத்தி அவர்களை தண்டிக்கின்ற ஒரு மிக மோசமான மிருகத்தனமான செயற்பாடு நடைபெற்றது.
இன்றைய நிலையில் கொஞ்சம் எங்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கின்றது, இந்த குற்றவாளிகள் எந்த நிலையில் இருந்தாலும், எந்த உயர்மட்டத்தில் இருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமன் என்ற அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படுகின்ற போதுதான் சட்ட ஆட்சி நடைபெறுகின்றது, நீதித்துறை சுதந்திரமாக இயங்குகின்றது என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.
எனவே அந்த செயலை இந்த அரசாங்கம் மிகவும் வேகமாக விசாரணை செய்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்ற இந்த மக்களுக்கு நீதியும் நியாயமும் வழங்க வேண்டும் என்று மிகவும் அன்பாக இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.



















