ஆசியக் கடல் பகுதியில் ஈரான் கொடி ஏற்றிய குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க இராணுவம் இடைமறித்து, இந்தியா, மலேசியா மற்றும் இலங்கை அருகே உள்ள அவற்றின் நிலைகளிலிருந்து திசை திருப்பி வருவதாக கப்பல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் புதன்கிழமை (22) தெரிவித்தன.
வொஷிங்டன் ஈரானின் கடல்வழி வர்த்தகத்திற்கு முற்றுகையை விதித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு வளைகுடாவின் நுழைவாயிலில் உள்ள ஹார்முஸ் நீரிணை நீர்வழிப்பாதை வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் ஈரான் அவை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தின் மத்தியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகின்றன.
நீரிணை மூடப்பட்டதால், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் அண்மைய நாட்களில் ஒரு ஈரானிய சரக்குக் கப்பலையும் ஒரு எண்ணெய் கப்பலையும் கைப்பற்றியுள்ளன.
புதன்கிழமையன்று, ஹார்முஸ் நீரிணை வழியாக வளைகுடாவிலிருந்து வெளியேற முயன்ற இரண்டு கொள்கலன் கப்பல்கள் மற்றும் மற்றொரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவற்றைக் கைப்பற்றியதாக ஈரான் கூறியது; போர் தொடங்கியதிலிருந்து இதுவே அதன் முதல் கைப்பற்றலாகும்.
அதேநேரம், புதன்கிழமையன்று ராய்ட்டர்ஸிடம் பேசிய இரண்டு அமெரிக்க மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து வட்டாரங்கள் மற்றும் இரண்டு தனித்தனி மேற்கத்திய கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்களின்படி, அமெரிக்கா அண்மைய நாட்களில் ஈரானியக் கொடியுடன் கூடிய மேலும் குறைந்தது மூன்று எண்ணெய் கப்பல்களைத் திசை திருப்பியுள்ளதாகக் கூறியது.
இந்த இடைமறிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமெரிக்க இராணுவம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
மரைன்டிராஃபிக் தளத்தின் தகவல்களின்படியும், கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படியும், இடைமறிக்கப்பட்ட கப்பல்களில் ஒன்று ஈரான் கொடியிடப்பட்ட ‘டீப் சீ சூப்பர்டேங்கர்’ ஆகும்.
அது பகுதியளவு மசகு எண்ணெயுடன் ஏற்றப்பட்டிருந்ததுடன், ஒரு வாரத்திற்கு முன்பு மலேசியக் கடற்கரைக்கு அப்பால் அதன் பொது கண்காணிப்பு டிரான்ஸ்பாண்டரில் கடைசியாகக் காணப்பட்டது.
அதிகபட்சமாக 1 மில்லியன் பீப்பாய்கள் கொள்ளளவு கொண்டதும், அதன் சுமையில் 65%-ஐ ஏற்றிச் சென்றதுமான, ஈரான் கொடியிடப்பட்ட சிறிய ‘செவின்’ கப்பலும் இடைமறிக்கப்பட்டது.
கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, அந்தக் கப்பல் ஒரு மாதத்திற்கு முன்பு மலேசியக் கடற்கரைக்கு அப்பால் கடைசியாகக் காணப்பட்டது.
மரைன்டிராஃபிக் தளத்தின் தகவல்களின்படியும், கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படியும், ஈரான் கொடியிடப்பட்ட ‘டோரேனா’ சூப்பர்டேங்கர் கப்பலும் இடைமறிக்கப்பட்டது.
அது 2 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயுடன் முழுமையாக ஏற்றப்பட்டிருந்ததுடன், மூன்று நாட்களுக்கு முன்பு தென்னிந்தியக் கடற்கரைக்கு அப்பால் கடைசியாகக் காணப்பட்டது.
முற்றுகையை மீற முயன்ற டோரேனா கப்பல், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றின் பாதுகாப்புடன் இருந்து வருவதாக, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு புதன்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
ஈரானியக் கொடியுடன் கூடிய டெரியா என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள் இடைமறித்திருக்கலாம் என்று கப்பல் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரானிய மசகு எண்ணெய் கொள்முதல் மீதான அமெரிக்காவின் விலக்கு ஞாயிற்றுக்கிழமை காலாவதியாவதற்குள், அந்தக் கப்பல் இந்தியாவில் தனது ஈரானிய எண்ணெய் சரக்கை இறக்கத் தவறியது.
மரைன்ட்ராஃபிக் தரவுகளின்படி, அந்தக் கப்பல் கடைசியாக வெள்ளிக்கிழமை இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் காணப்பட்டது.
ஈரானியத் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான முற்றுகை தொடங்கியதிலிருந்து, 29 கப்பல்களைத் திரும்பிச் செல்லுமாறு அல்லது துறைமுகத்திற்கே திரும்புமாறு அமெரிக்கப் படைகள் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம், அது இடைமறித்த அனைத்துக் கப்பல்களின் பட்டியலையும் வெளியிடவில்லை; மேலும், டெய்ரா மற்றும் டீப் சீ குறித்துக் கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
















