தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின் நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி சுமார் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த சூழலில் சினிமா, அரசியல் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார்.
“என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்களாக ஆக்கியது போதும்.
கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல் கடைக்கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். நான் வைக்கும் இந்த கருத்தை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இதை செய்வார்களா என்று தெரியாது. ஆனால், செய்தால் சந்தோஷம். கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என சிவக்குமார் தெரிவித்தார்.















