நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த மேலதிக பணக் கொடுப்பனவு தொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலைப்படுத்தல் முறையின்றி அரச நிதியைக் கையாள்வது ஒரு குற்றம், ஊழல் மற்றும் மோசடியாகும் என சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரையின் கீழ் அரச நிதி தொடர்பான அதிகாரத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்றம் பின்வரும் வினாக்களுக்கான விடைகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பணம் பெற வேண்டியிருந்த சுமார் 18 இலட்சம் குடும்பங்களில், எத்தனை குடும்பங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம்/இரட்டைக் கொடுப்பனவுகள் கிடைத்துள்ளன?
கேகாலை, மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள இரட்டைக் கொடுப்பனவுகளின் அளவு தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா?
அஸ்வெசும பயனாளிகளுக்கு எந்தவித ஆராய்வும் இன்றி, பொறுப்பற்ற முறையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வழங்கப்பட்டுள்ள மொத்தப் பணத்தின் அளவு எவ்வளவு?
இரண்டு முறை பணம் (Double Payment) மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பணம் (Additional Payment/Extra Payment) பெற்றுக்கொண்ட மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
நலன்புரிச் சபையின் நிதி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முறை/நடைமுறைக்கு முரணாக இந்தப் பணக் கொடுப்பனவை மேற்கொண்ட அதிகாரிகள் யார்?
நலன்புரிச் சபையின் நடவடிக்கைகளுக்காக அரசியல் நியமனமாக இணைக்கப்பட்டுள்ள அதிகாரி/அதிகாரிகள்/ஆணையாளர் யார்?
அரசியல் நியமனங்களைப் பெற்று இவ்வளவு பாரிய தொகைப் பணத்தை வீணடித்தமை/முறைகேடாகக் கையாண்டமை/ஊழல் செய்தமை தொடர்பில் இதுவரை முறையான அதிகார சபையின் கீழ் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதா?
இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு நிதி விதிமுறை (F.R.) 135 இன் கீழ் நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு அதிகாரம் வழங்கிய அதிகாரி/அதிகார சபை யார்?
திறைசேரியினால் இந்த மேலதிகப் பணம் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அதற்குப் பொறுப்பான திறைசேரி அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா?
அவ்வாறு இல்லையெனில், இதுவும் மற்றொரு ஹேக்கர் தாக்குதலா? அல்லது தவறுதலாக நடந்ததா? அல்லது நிதி அமைச்சு மற்றும் திறைசேரிக்கு அனுபவமற்ற, அலுவலக நடைமுறைகள் தொடர்பில் எவ்வித அறிவும், புரிதலும் அற்றவர்களை அரசியல் ரீதியாக நியமனம் செய்ததன் விளைவா? என கேள்விகள்
சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.














