நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தற்காலிக கூடாரங்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், ஹக்கலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் காற்றில் பறந்து செல்லும் நிலையில் உள்ளதாகவும், வீசும் பலத்த காற்றைத் தாங்கும் சக்தி அந்தக் கூடாரங்களுக்கு இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் பொது இடங்களிலும் தோட்டக் கோவிலிலும் தங்கியிருந்த இக்குடும்பங்கள், பின்னர் அரசாங்கத்தால் தற்காலிக கூடாரங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
எனினும், தற்போதைய மழைக்காலத்தில் இரவு நேரங்களில் இக்கூடாரங்களைச் சுற்றி விஷப் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், எந்நேரமும் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தாங்கள் படும் அவஸ்தைகள் குறித்துக் கடந்த மாதங்களில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தமைக்காக, வெளிமடை பிரதேச சபையின் அரச அதிகாரிகள் தங்களைக் கடுமையாகத் திட்டித் தீர்த்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
“நாங்கள் ஒரு முடிவை எடுக்கும் வரை இந்த அவல நிலை குறித்து யாரிடமும் கூறக் கூடாது” என அதிகாரிகள் தங்களை எச்சரித்துள்ளதாகவும் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமல் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் தமக்கு உடனடியாக விடிவு கிடைக்க வேண்டும் என அம்மக்கள் கோரியுள்ளனர்.
தமக்கான வீடுகளை முழுமைப்படுத்தித் தர வேண்டும் அல்லது பாதுகாப்பான வேறு இடத்தில் மீளக் குடியமர்த்த வேண்டும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன்வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.














