ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் “முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜாவின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸின் இணைப்பாக்கத்தில் காந்தி பூங்காவில் இன்று இடம்பெற்றது.
இத்தேசிய செயற்றிட்டத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 57 பொலிஸ் நிலையங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும் விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்” – அகன்று செல்” எனும் வாசகத்தை மையமாகக் கொண்ட துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டன.
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்றிட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டன.
இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள், முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.













