தற்போதைய ஆபத்தான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் காலப்பகுதியில், ஹண்டா வைரஸ் (Hantavirus) மற்றும் இபோலா வைரஸ் (Ebola) பரவலானது உலகிற்குப் புதிய நெருக்கடிகளாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான உலக சுகாதார அமைப்பின் வருடாந்த தீர்மானம் எடுக்கும் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய டெட்ரோஸ் அதானோம், காங்கோ குடியரசில் தீவிரமடைந்துள்ள புதிய இபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த வார இறுதியில் அதனை ஒரு ‘சர்வதேச சுகாதார அவசரநிலையாக’ (Public Health Emergency of International Concern) பிரகடனப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.
அத்துடன், ‘MV Hondius’ என்ற சொகுசுச் சுற்றுலாத் தளக் கப்பலில் (Cruise ship) இருந்து பதிவான அரிய வகை ஹண்டா வைரஸ் பரவல் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
இந்த இரு வைரஸ்களின் பரவலும் “நமது பிரச்சினைகள் நிறைந்த உலகின் புதிய நெருக்கடிகள் மட்டுமே” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியமை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பெருமளவிலான நிதி வெட்டுக்களால் உலக சுகாதார அமைப்பு பெரிதும் பலவீனமடைந்துள்ள ஒரு இக்கட்டான பின்னணியிலேயே இந்த 2026 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார பொதுச் சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இவ்விடயம் குறித்து ஜெனீவா பட்டதாரி நிறுவனத்தின் உலகளாவிய சுகாதார மையத்தின் (Global Health Centre) இணை இயக்குநர் சூரி மூன் (Suerie Moon) கருத்துத் தெரிவிக்கையில், உலக சுகாதார அமைப்பு இந்த மிகக் கடினமான காலப்பகுதியை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய ஹண்டா வைரஸ் அச்சுறுத்தல் மூலம், உலகிற்கு மிகவும் பயனுள்ள, நம்பகமான, அரசியல் சார்பற்ற நடுநிலையான மற்றும் நிலையான நிதியுதவியைக் கொண்ட ஒரு உலக சுகாதார அமைப்பின் தேவை எவ்வளவு அத்தியாவசியமானது என்பது மிகத் தெளிவாகப் புலப்படுவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.














