நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான இரண்டு கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவங்கள் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, படுக்கையறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பயணப் பையொன்றுக்குள் 79 வயது பெண் ஒருவரின் சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் சீதுவை, முகலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஆவார்.
உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்கள் கழற்றி அகற்றப்பட்டிருப்பதுடன், தொலைபேசி வயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (21) மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஃபர்கியுசன் வீதி பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் முகத்துவாரம் உயன அடுக்கு மாடிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.
குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













